உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71), இன்று (மே 15) சிகிச்சை பலனின்றிக் காலமானார்.
தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் பாட்ஷா, நாயகன், குணா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல சினிமாவிலும் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர். சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படுபவர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதியுள்ள மெர்க்குரி பூக்கள், உடையார் உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானது. பெரும் வாசகப் பரப்பின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி பாலகுமாரன்.
சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.
சென்னை அபிராமபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த பாலகுமாரனுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இது அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு, இலக்கிய உலகிற்கும், திரைத்துறைக்கும் பெரும் இழப்பு. நடிகர் கமல் ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.