7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி
Updated on
1 min read

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவன் டக்-அவுட்டாக, 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் டக்-அவுட்டானார். மணீஷ் பாண்டே 2, ஹார்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்நிலையில், ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நங்கூரமாய் நின்ற தோனி, ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார்.

சற்று தாக்குபிடித்த குல்தீப் யாதவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, பும்ராவும் டக்-அவுட்டாக, தோனி அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மொத்தம் 87 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரி, 2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 65 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன்காரணமாக இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் அற்புதமாக பந்துவீசிய லக்மல் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேத்யூஸ், பெரேரா, தனஞ்ஜெயா, பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்நிலையில், 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் உபுல் தரங்கா 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நடுவரிசை வீரர்களான ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 25 ரன்களுடனும்,  நிரோஷன் டிக்வெல்லா 26 ரன்களுடனும் களத்தில் நின்று இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார், பும்ரா, பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலைப் பெற்றது. 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் டிசம்பர் 13-ந் தேதி புதன்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com