ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரையும் வென்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தத் தொடரில் அந்த அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்தமுறை ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் சென்றுள்ளது.
இதையடுத்து கொண்டாட்ட மனநிலையில் உள்ளார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆஷஸ் கோப்பையுடன் அவர்கள் கொண்டாடிய தருணங்களின் புகைப்படங்கள் ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகியவற்றின் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.