இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி பேசியதாவது:
வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. ஒரு போட்டித் தொடருக்கு தயாராக எங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை.
அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா தொடருக்கு 2 நாட்கள் தான் அவகாசம் உள்ளது. அதனால் தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தத் தொடரை பயிற்சிக் களமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
முன்பெல்லாம் அந்நிய நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களுக்கு 20 நாட்கள் முன்பாகச் சென்று அங்குள்ள தட்பவெட்ப நிலைக்கு பழகிக்கொண்டு, பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு ஏற்படும். இதனால் வீரர்கள் மனதளவில் உற்சாகமாக இருப்பர்.
ஆனால், இப்போதைய நிலை தலைகீழாக உள்ளது. தொடர் போட்டிகளின் காரணமாக வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுகிறார்கள். இதற்கு போட்டி அட்டவணையே முக்கியக் காரணம். இங்கு போதிய காலஅவகாசம் இருப்பதில்லை. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று.
ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்னதாகவும் எங்களை உடலளவிலும், மனதளவிலும் தயார்படுத்திக்கொள்ள குறைந்தபட்சம் 1 மாத காலம் தேவைப்படுகிறது. இதனால் எங்களால் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று சரமாரியாகச் சாடினார்.
விராட் கோலியின் இந்த கருத்து தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, என் உடம்பைக் கிழித்தால் அதில் ரத்தம் தான் வரும், நான் ஒன்றும் இயந்திரம் இல்லை என தொடர் போட்டிகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.