ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்!

ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார்...
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்!

ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 

2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம். 

ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில், இரண்டு வருடங்களாக ஐபிஎல்-லில் இல்லாததால் சிஎஸ்கே என்கிற பிராண்டுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. அணி வீரர்களைத் தக்கவைக்க அனுமதித்தால் தோனியை நிச்சயம் தக்கவைத்துக் கொள்வோம். 2015-ல் அணியில் பணியாற்றிய அனைத்து பயிற்சியாளர்களையும் மீண்டும் அழைக்கவுள்ளோம் என்றார். 

ஐபிஎல் நிர்வாகக் குழு விரைவில் சந்தித்து ஏலம் தொடர்பான முடிவுகளை எடுக்கவுள்ளது. புணே, குஜராத் அணிகளின் வீரர்களை ஏலத்தில் விடுவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவேண்டும். மேலும் ஐபிஎல்-லில் இடம்பெறும் அனைத்து வீரர்களுக்குமான பொதுவான ஏலம் நடைபெறப்போகிறதா அல்லது ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுமா என்றும் அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும். 

எல்லாம் சரி. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில், தோனி சென்னை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதா?

கொஞ்சம் கஷ்டம்தான் என்கிறார் முன்னாள் வீரரான நிகில் சோப்ரா. ஏனாம்?

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகவுள்ள முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக தோனி இருப்பார். ஐபிஎல்-லில் தன்னுடைய தலைமைப் பண்பை தோனி நிரூபித்துள்ளதால் அவரைத் தேர்வு செய்யவே எல்லா அணிகளும் ஆர்வம் காண்பிப்பார்கள். இந்திய வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பதும் ஓர் அணிக்குச் சாதகமான விஷயம். எனவே தோனியைத் தங்கள் பக்கம் இழுக்க அணிகள் கடும் முயற்சி செய்வார்கள் என்று சிஎஸ்கே அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகை பெற்ற முதல் ஐந்து வீரர்களின் பட்டியல். இந்தமுறை தோனி ரூ. 16 கோடியை விடவும் அதிகம் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை பெற்ற வீரர்கள்

வீரர்ஏலத்தொகைஅணிவருடம்
யுவ்ராஜ் சிங்ரூ. 16 கோடிடெல்லி2015
விராட் கோலிரூ. 15 கோடிஆர்சிபி2017
பென் ஸ்டோக்ஸ்ரூ. 14.5 கோடிபுணே2017
யுவ்ராஜ் சிங்ரூ. 14 கோடிஆர்சிபி2014
தோனிரூ. 12.5 கோடிபுணே2016

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com