தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். மேலும் இதில் புதுவகை பந்துவீச்சு முறையை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வகைப் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் பேசியதாவது:
இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் பந்துவீசுவதையே நான் மிகவும் விரும்புகிறேன். வெற்றிபெற்றால் அனைத்து வலிகளும் தன்னால் மறைந்துவிடும். ஒவ்வொரு முறை இந்திய அணியின் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போதும், பௌன்சர் பந்துகளை எதிர்கொள்வது தொடர்பான விமரிசனங்கள் எழும். ஆனால் அதனை இந்த தொடரில் மிகச்சிறப்பாகவே எதிர்கொண்டோம்.
தற்போதைய காலகட்டத்தில் விக்கெட் வீழ்த்த புதுப்புது யுக்திகளைக் பயன்படுத்த வேண்டியுள்ளது. நானும் இந்த புதிய வகைப் பந்துவீச்சை (knuckle ball) கடந்த ஒரு வருடமாக கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். அது தற்போது பலனளித்துள்ளது என்றார்.
முன்னதாக, இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களின் ஒருவரான ஜாகீர் கான், இந்த வகை பந்துவீச்சு முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.