ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு!

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும்...
ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அன்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார். 

இது தோனியின் வழக்கமான செயல் அல்ல. இந்திய அணி வெற்றி பெறுகிற தருணங்களில் மட்டும் ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்வது தோனியின் வழக்கமாக உள்ளது. மற்றபடி நேற்று தோல்வி பெற்ற ஓர் ஆட்டத்தின் முடிவில் புதிய வழக்கமாக நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 

2014-ல் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் முன்பு தோனி இதேபோல ஒரு செயலைச் செய்தார். அதுதான் தற்போதைய பயத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஸ்டம்பை எடுத்துவைத்துக்கொண்டார் தோனி. இது இந்திய அணி வீரர்களுக்குப் புதிராக இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. அதேபோல தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தோனி விலக முடிவெடுத்துள்ளார், அதனால்தான் பந்தை நடுவரிடமிருந்து வாங்கியுள்ளார் என நேற்றிரவு முதல் பரபரப்பு உருவாகியுள்ளது. 

2-வது ஒருநாள் போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் தோனி. இதற்குக் கடுமையான விமரிசனங்களை அவர் எதிர்கொண்டார். நேற்றும் சுமாராகவே ஆடினார். 66 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்று ஒருநாள் தொடரிலும் தோல்வியை எதிர்கொண்டது. 

இதனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற முடிவெடித்துள்ளார், அதற்கான அறிவிப்பைச் சில நாள்களில் அறிவிக்கவுள்ளார், அதனால்தான் தன்னுடைய கடைசி ஆட்டத்தின் ஞாபகமாக பந்தை வாங்கிவைத்துக்கொண்டார் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

நேற்றைய ஆட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்துல் தாக்குரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் அதைப் பார்க்கவில்லை, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்று பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com