தோனி ஓய்வு பெறப்போவதாக உருவான பரபரப்பு: ரவி சாஸ்திரி விளக்கம்!

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும்...
தோனி ஓய்வு பெறப்போவதாக உருவான பரபரப்பு: ரவி சாஸ்திரி விளக்கம்!

தோனி ஒய்வுபெறப்போவதாக உருவான பரபரப்பு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தின. 

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அன்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார். 

இது தோனியின் வழக்கமான செயல் அல்ல. இந்திய அணி வெற்றி பெறுகிற தருணங்களில் மட்டும் ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்வது தோனியின் வழக்கமாக உள்ளது. மற்றபடி தோல்வி பெற்ற ஓர் ஆட்டத்தின் முடிவில் புதிய வழக்கமாக நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியது. 

2014-ல் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் முன்பு தோனி இதேபோல ஒரு செயலைச் செய்தார். அதுதான் தற்போதைய பயத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஸ்டம்பை எடுத்துவைத்துக்கொண்டார் தோனி. இது இந்திய அணி வீரர்களுக்குப் புதிராக இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. அதேபோல தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தோனி விலக முடிவெடுத்துள்ளார், அதனால்தான் பந்தை நடுவரிடமிருந்து வாங்கியுள்ளார் எனக் கடந்த இரு நாள்களாகச் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு உருவானது. 

இந்நிலையில் தோனி ஒய்வுபெறப்போவதாக உருவான பரபரப்பு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

நடுவரிடமிருந்து தோனி பந்தை வாங்கியதற்குக் காரணம் - அந்தப் பந்தின் தன்மை குறித்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணிடம் விளக்குவதற்காகத்தான். பந்து எந்தளவுக்குத் தேய்மானம் கண்டுள்ளது, பந்தின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை விளக்குவதற்காகப் பந்தை வாங்கிச் சென்றார் தோனி. இதை வைத்து தோனி ஓய்வு பெறப்போகிறார் என்று கதை கட்டுவது முட்டாள்தனம். தோனி எங்கேயும் சென்றுவிடமாட்டார். ஆனால் இதை வைத்து உருவான அமளிகள் எல்லாம் அபத்தங்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com