பிரபல கிரிக்கெட் வீரர் ஷமி மீது கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார் அவருடைய மனைவி ஹசின் ஜஹான். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு. ஷமியின் குடும்பம் என்னைக் கடந்த மூன்று வருடங்களாகக் கொடுமைப்படுத்தி வருகிறது. என்னிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் கொண்டு ஷமி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். ஷமியின் கள்ளத் தொடர்புகளையும் என் மீதான கொடுமைகளையும் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சில நாள்களுக்கு முன்பு புகார் கூறினார். இதன் விளைவாக, புகாரில் சிக்கியுள்ள முகமது ஷமி பிசிசிஐ-யின் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் ஹசின் அளித்த புகாரின் பேரில் ஷமி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீதும் கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. மனைவியைக் கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது, காயப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஷமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.