5 ஆண்டுகளுக்கு லாபம் ஈட்டித் தரும் கருவேப்பிலை!

சமையலுக்கு மணத்தை அள்ளித் தரும், சத்துகள் நிறைந்த கருவேப்பிலை சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் 5 ஆண்டுகளுக்கு
5 ஆண்டுகளுக்கு லாபம் ஈட்டித் தரும் கருவேப்பிலை!


திருச்சி: சமையலுக்கு மணத்தை அள்ளித் தரும், சத்துகள் நிறைந்த கருவேப்பிலை சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நல்ல வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ரகங்கள்: செண்காம்பு, தார்வாடு 1 , தார்வாடு 2 ஆகிய ரகங்கள் சிறந்தவை.
மண் மற்றும் தட்பவெப்பநிலை: சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மிதமான வெப்பநிலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
பருவம் மற்றும் நடவு: ஜூலை, ஆகஸ்ட் மாதம் கருவேப்பிலை சாகுபடிக்கு உகந்தது. விதைகளை பறித்த 3 அல்லது 4 நாள்களில் பாலித்தீன் பைகளில் விதைக்க வேண்டும். ஒரு வயதுடைய நாற்றுகள் நடவுக்கு உகந்தவை.
நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது மண்ணைப் பண்படச் செய்தல் வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் என்ற அளவில் இடவேண்டும். 1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30-க்கு 30 செ.மீ என்ற அளவில் குழிகள் எடுத்து 2 அல்லது 3 மாதம் கழித்து நடவு செய்ய வேண்டும். குழிகளின் நடுவே ஒரு நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் நிர்வாகம்: நடவு செய்தவுடன் தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும். உயிர் தண்ணீர் மூன்றாவது நாளும் அதன் பின்னர் வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
பின்நேர்த்தி: களையை அவ்வப்போது நீக்கவேண்டும். நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். கருவேப்பிலை செடிகள் ஒரு மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக் கொழுந்தினை கிள்ளிவிடு
வதன் மூலம் பக்க கிளைகளின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. ஒரு செடிக்கு 5 முதல் 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: எலுமிச்சைப் பயிரினைத் தாக்கும் புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும். பின் மாலத்தியான் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். செதில் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் ஒரு மில்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். கந்தக மருந்துகளை கருவேப்பிலைக்கு பயன்படுத்தக் கூடாது.
மகசூல்: முதலாமாண்டு ஒரு ஹெக்டேரிலிருந்து 250 முதல் 400 கிலோ மகசூல் கிடைக்கும். 2ஆம் ஆண்டு 4 மாதங்களுக்கு ஒருமுறை 1,800 கிலோ மகசூல் கிடைக்கும். மூன்றாமாண்டு 5,400 கிலோவும், 4ஆம் ஆண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 2,500 கிலோவும், 5-ஆம் ஆண்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை 5 ஆயிரம் கிலோவும் மகசூல் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com