பாஜக ஆட்சிக்கு வந்தால் நீர்ப் பாசனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்: எடியூரப்பா

பாஜக ஆட்சிக்கு வந்தால் நீர்ப்பாசனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
Updated on
2 min read

பாஜக ஆட்சிக்கு வந்தால் நீர்ப்பாசனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜகவின் மாற்றத்துக்கானப் பயண நிறைவுமாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:  கடந்த 85 நாள்களில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 2 கோடி மக்களை சந்தித்து பேசி வந்திருக்கிறேன்.  மாநிலமெங்கும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதை உணரமுடிகிறது.  மேலும் இளைஞர்கள், பெண்கள்,  ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளையும் அறிந்துகொள்ள முடிந்தது.  மத்தியில் மூன்றரை ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனை,  முந்தைய பாஜக அரசின் சாதனை மற்றும் காங்கிரஸ் அரசின் தோல்விகள் மாற்றத்துக்கானப் பயணத்தை வெற்றியடைய செய்துள்ளது.  கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதி.  அப்போது நேர்மையான, நல்லாட்சி மலரும். விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களின் விருப்பங்களுக்கு தகுந்தவாறு ஆட்சி நடக்கும்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிருஷ்ணா அணை திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வீதம், ஐந்து ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தனர்.  ஆனால் இதுவரை ரூ.8500கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.  இது கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு செய்துள்ள துரோகமாகும்.  2012-ஆம் ஆண்டில் கிருஷ்ணா நடுவர் மன்றம் 173 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திற்கு ஒதுக்கியது.  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்வதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது.  எனவே, பாஜக ஆட்சிக்கு வந்தால் கிருஷ்ணா அணை உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு, அனைத்து திட்டங்களும் நிறைவுசெய்யப்படும். 
ஊழல் தடுப்புப்படையை அமைத்து தனது ஊழல் அமைச்சர்களை முதல்வர் சித்தராமையா பாதுகாத்துவருகிறார்.  ஒருவேளை லோக் ஆயுக்த அமைப்பு செயல்பட்டிருந்தால் இந்நேரம் பல அமைச்சர்கள் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்க நேர்ந்திருக்கும்.  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 6521 கொலைகள்,  3200 பாலியல் பலாத்காரங்கள், 32 ஹிந்து தொண்டர்களின் கொலைகள் நடந்துள்ளன.  பயங்கரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளது. 
3550 விவசாயிகள் தற்கொலை செய்திருந்தும், விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாத சித்தராமையா தூக்கத்தில் மூழ்கியுள்ளார்.  பிரதமர் மோடி அரசு உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.  எல்லைப் பாதுகாப்பு,  பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்திலும் உலகமே பிரதமர் மோடியை திரும்பிப் பார்க்கிறது.  உலகம் ஏற்கும் தலைவராக பிரதமர் மோடி உயர்ந்திருக்கிறார்.  ஹிந்து-முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதே பாஜகவின் நோக்கமாகும். 
 பிரதமர் மோடியின்கனவுப்படி காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்.  அதன்முதல்படியாக, காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை அமைப்போம்.  கர்நாடகத்தில் இருந்து காங்கிரசை விரட்டி அடிப்போம்.  அடுத்த3 மாதங்கள்கடுமையாக உழைத்தால்,  அடுத்த 5 ஆண்டுகள் கர்நாடக மக்களுக்கு நிம்மதி கிடைக்கும். 
 மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு,  கர்நாடகத்தில் பாஜக அரசு அமைந்தால் கர்நாடகம் வளர்ச்சி காணும் என்பதில் ஐயமில்லை.  எனவே, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருக்க கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com