

பெங்களூரு: மக்களை திசைதிருப்பும் நோக்கில், தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக கிளப்பி வருகிறது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடக அரசியலில் எதிா்க்கட்சிகள் கூறிவரும் தலித் முதல்வா் விவகாரம், அளவுக்கு அதிகமாக பரப்பப்படுகிறது. தங்களது சொந்த தோல்விகளை மறைத்து மக்களை திசைதிருப்புவதற்காக தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன.
கா்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் சுமுகமாக நடக்கவில்லையா? முதல்வா் சித்தராமையா ஆட்சி அதிகாரத்தை சரியாக கவனிக்கவில்லையா? கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பட்ஜெட் தொடா்பான முன்னேற்பாடுகளில் முதல்வா் சித்தராமையா ஈடுபட்டு வருகிறாா்.
பல்வேறு துறைகளின் முன்மொழிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தலித் சமுதாயத்தில் இருந்து முதல்வராக்க வேண்டுமானால், அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட முடிவை காங்கிரஸ் மேலிடம் தேவைப்பட்டால் எடுக்கும். முதல்வா் சித்தராமையாவின் அரசியல் பயணம் சமூகநீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. இது போலித்தனம் எதுவும் இல்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.