"டெங்கு, சிக்குன்குனியாவைத் தடுக்க நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து'

டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் குணமாக்கவும், வராமல் தடுக்கவும் நிலவேம்பு குடிநீர் மிகவும் சிறந்த மருந்து என்று பெங்களூரில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்
"டெங்கு, சிக்குன்குனியாவைத் தடுக்க நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து'

டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் குணமாக்கவும், வராமல் தடுக்கவும் நிலவேம்பு குடிநீர் மிகவும் சிறந்த மருந்து என்று பெங்களூரில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் சித்த மருத்துவ ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி அலுவலர்(பொறுப்பு) மருத்துவர் மீ.ஹரிஹர மகாதேவன் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியது: கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், 2019, ஜன.1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் நாட்டிலேயே மிக அதிகமாக கர்நாடக மாநிலத்தில் 1303 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019, ஆக.9ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள கர்நாடக அரசின் புள்ளி விவரப்படி பெங்களூரில் மட்டும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,320 என கணக்கிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் பெங்களூரில் டெங்கு தொற்று தீவிரமாக உணரப்படுவதால் மக்கள் இந்த நோயை பற்றி மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
டெங்கு என்பது உலகின் வெப்ப மண்டல நாடுகளில் ஃப்ளேவி வைரஸ் (Flavi Virus) எனும் ஒரு வகை வைரஸால் ஏற்படும் தொற்று நோய். பலரும் நினைப்பது போல் டெங்கு என்பது ஒரு வகை காய்ச்சல் மட்டுமல்ல. காய்ச்சல், டெங்கு நோயின் ஒரு குறிகுணமே. முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் டெங்கு காய்ச்சல் அதன் அடுத்த நிலையாக உடலின் நுண்ணிய குருதிக்குழல்களில் குருதிப்போக்கை ஏற்படுத்தி இறப்பையும் உண்டாக்கலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் டெங்கு பற்றி மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
டெங்கு நோய்க்கான காரணம்: டெங்கு நோய்க்கு காரணமான ஃப்ளேவி வைரஸ் மேலும் DENV 1,DENV2, DENV3, DENV4 என்று 4 வகைகளாக பகுக்கப்படுகிறது.டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதனை கடித்த கொசுக்கள் அதை மற்ற மனிதர்களுக்கும் கடத்துகிறது. எனவே டெங்கு வைரஸ் தொற்றுக்கான காரணியாக கொசுக்கள் உள்ளன. எல்லா வகையான கொசுக்களும் டெங்கு வைரஸை கடத்துவது இல்லை. 
நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் Aedes aegypti, Aedes albopictus எனும் இரண்டு வகை கொசுக்கள் மட்டுமே டெங்கு வைரஸை கடத்துகின்றன. பகலில் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கி மனிதர்களின் ரத்தத்தை குடிப்பது இந்த வகை கொசுக்களின் சிறப்பு குணம் ஆகும். Aedes aegypti எனும் கொசு வகை உடலில் சிறு சிறு வரிகளுடன் காணப்படுவதால் "ஆசியப்புலி' (Asian tiger) எனும் செல்ல பெயருடன் பூச்சியியல் நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. 
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டு வைரஸ் தொற்று தீவிர நிலையில் இருக்கும் போது( 5ஆவது நாளுக்கு பிறகு) கொசுக்கள் அவரை கடித்தால், வைரஸ் அந்த கொசுவினுள் கடத்தப்படுகிறது. கொசு, தன்னுடைய உடலில் அதை வீரியம் மிக்க வைரஸாக வளர்த்தெடுக்க 8-12 நாட்கள் தேவைப்படுகிறது, பின்னர் அது மற்றொரு மனிதரை கடிக்கும் போது அவரின் உடலில் வைரஸ் தொற்றுகிறது. அதன் பிறகு 4 முதல் 7 ஆவது நாளில் அவருடைய உடலில் குறிகுணங்களை காண்பிக்க ஆரம்பிக்கிறது. இப்படி டெங்கு வைரஸ் கடத்தும் வேலையை செய்யும் கொசுக்களை ஒழிப்பதால் மட்டுமே டெங்குவை அடியோடு அழிக்க முடியும். 
இதற்காக நாம் நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன் மழை தண்ணீர் தேங்கும் பொருட்களை நம் சுற்றுப்புறத்தில் இருந்து அகற்றுதல், வீடுகளில் நல்ல தண்ணீர் சேகரித்து வைக்கும் கலன்களில் கொசுக்கள் வளரவிடாமல் மூடி வைத்து பாதுகாத்தல், மீன் வளர்க்கும் தொட்டிகளை கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யாதவாறு அடிக்கடி சுத்தப்படுத்துதல், செடிகள் வளர்க்கும் தொட்டிகளை சுற்றி தேங்கியிருக்கும் நீரை அவ்வப்போது அகற்றி சுத்தப்படுத்துதல், கொசு மருந்து தெளிக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தல் போன்றவற்றின் மூலமே டெங்கு கொசுக்களை ஒழிக்க முடியும்.
சித்த மருத்துவ வழக்குமுறைகளின்படி வேம்பு இலைகள், குங்கிலியம் கலந்து புகை போடுவதன் மூலமும் கொசுக்களை விரட்டலாம். சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலவேம்பு குடிநீர், காய்ச்சல்களுக்கான உள்மருந்து மட்டுமன்று அது சிறந்த கொசு விரட்டி என்று சென்னை கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
டெங்குவின் குறிகுணங்கள்: டெங்கு நோயின் முதல் குறிகுணமாக மிக தீவிரமான காய்ச்சல் ஏற்படும். காய்ச்சலுடன் சேர்ந்து உடல் முழுவதும் வலி, தலைவலி, கண்களின் பின்புறம் வலி, வாந்தி, குமட்டல் போன்ற குறிகுணங்களில் ஒன்றோ பலவோ ஏற்படலாம். இதனுடன் ஆய்வுக்கூட குருதி சோதனையில் உடலில் வெள்ளை அணுக்கள் சிறிது குறையலாம். இந்த குறிகுணங்கள் உடையவருக்கு மருத்துவர் பரிந்துரையின் படி டெங்கு பாதிப்பை உறுதிப்படுத்தும் குருதி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு சிலருக்கு டெங்கு அடிப்படையான சில குறிகுணங்களை மட்டும் ஏற்படுத்தி குணமாகி விடும். ஒரு சிலருக்கு மிக தீவிர நோய் நிலையை ஏற்படுத்தலாம். டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கீழ்கண்ட குறிகுணங்களில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ இருந்தால் அது எச்சரிக்கை குறிகுணங்களாக கருத வேண்டும் என்று உலக சுகாதார மையம் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறிப்பிடுகின்றன.
எச்சரிக்கை குறிகளான வயிற்றுவலி மற்றும் வயிற்றுதசை இறுக்கம், அதிகரித்த வாந்தி, வயிற்று உள் உறுப்புகளில் நீர் தேக்கம், உடலின் சளி சவ்வுகளில் இரத்தக்கசிவு, கல்லீரல் வீக்கம் ( ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறிய வேண்டும்) ஆகியவற்றை கண்டறிய வேண்டும். ஆய்வுக்கூட சோதனைகள் வாயிலாக, ரத்த அணுக்களின் வீழ்படிதல் அதிகமாக இருத்தல், ரத்தத்தில் தட்டை அணுக்கள் எண்ணிக்கை குறைதல் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். டெங்குவின் மிக தீவிர நிலையில் (Severe condition) கடுமையான வசா நீர் (plasma) கசிவு ஏற்படும். இதனால் நுரையீரலில் நீர்கோர்த்தல், மூச்சு விட சிரமம் போன்ற குறிகுணங்கள் ஏற்படும். உடல் உள் உறுப்புகளில் கடுமையான இரத்தப்போக்கு, உடல் உள் உறுப்புகள் சேதம் அடையும். கல்லீரல்,இதயம், நரம்பு மண்டல பாதிப்புகள் இந்த நிலையில் ஏற்படலாம்.
டெங்கு சுரம் பரவும் கால கட்டத்தில் சாதாரண சுரமாக இருந்தாலும்,கவனக்குறைவாக இல்லாமல் உரிய சிகிச்சை மேற்கொண்டால் தீவிர நிலைக்கு உட்படுவதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்.
டெங்குவிற்கு சித்த மருத்துவம்: டெங்கு வெப்பமண்டல நாடுகளின் நோய் என்பதால், வெப்ப மண்டல நாடான இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் இந்நோய் பற்றிய குறிப்புகளும் மருந்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. நவீன மருத்துவ முறைகளின் மூலம் டெங்குவின் மிக தீவிரமான குறிகுணங்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.ஆனால் நவீன மருத்துவத்தில் வைரசுக்கு எதிரான (Antivirus) நேரடியான மருந்துகள் இல்லாத போது அந்த குறையை சித்த மருத்துவமும் சேர்த்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் மூலம் மட்டுமே ஈடுகட்டலாம்.
சித்த மருத்துவ நூல்களில் டெங்கு "பித்த காய்ச்சல்' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீர் என்னும் மூலிகை சித்த மருந்து டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழிக்கும் செய்கை உடையதாக மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் (Central council for Research in Siddha) மற்றும் International Centre for Genetic Engineering and Biotechnology, New Delhi இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் நிரூபித்துள்ளன.
நிலவேம்பு குடிநீர் டெங்குவிற்கான மருந்தாக மட்டுமல்லாமல் உடலில் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும் செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் நிலவேம்பு குடிநீர் டெங்குவில் செயல்படும் திறனை உறுதிப்படுத்துகின்றன. நிலவேம்பு குடிநீர் 9 வகையான மூலிகைகள் சம அளவில் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த மூலிகைப்பொடியை உரிய வழிமுறையில் தண்ணீரில் கலந்து நான்கில் ஒன்றாகவோ, எட்டில் ஒன்றாகவோ குடிநீராக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
நவீன மருத்துவம் ஆய்வு கூடத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் புழக்கத்தில் இருந்து அதன் செயல்திறன் ஆய்வுக்கூடங்களில் நிரூபிக்கப்படுகிறது. மக்களிடம் புழக்கத்தில் உள்ள சித்த மருந்தாகிய நிலவேம்பு குடிநீரின் டெங்குவிற்கு எதிரான செயல்திறன் ஆய்வுக்கூடத்தில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், டெங்குவிற்கு தடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவமாக நிலவேம்பு குடிநீரை ஊக்குவிக்கும் பணியை அரசு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மெஜஸ்டிக், ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ ஆய்வு மையத்தில் தினமும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது. நிலவேம்பு குடிநீரை தயாரித்து பயன்படுத்தும் முறைகள் மற்றும் பிற நோய்களுக்கான சித்த மருத்துவம் பற்றிய இலவச ஆலோசனைகள் பெங்களூரு சித்த மருத்து ஆய்வு மையத்தில் கொடுக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 080-2970053 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com