பாஜக-மஜத இணைவதால் காங்கிரசுக்கு பாதிப்பில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜக-மஜத இணைவது குறித்து ஆதங்கப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவும் மஜதவும் இணைந்தால், காங்கிரஸ் கட்சிக்குப் பாதிப்பில்லை. இரு கட்சிகளும் இணைவது குறித்து கருத்துக்கூற வேண்டிய அவசியமில்லை. அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் பாஜக-மஜத இணைப்பு குறித்து காங்கிரசுக்கு கவலையில்லை.
நாடு முழுவதும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் மாற்றங்கள் நடந்துவருகின்றன. அதற்காக அரசியலில் இதுதான் நடக்கும் என்று எதையும் அறுதியிட்டு கூறமுடியாது.
காங்கிரஸ் கட்சியினா் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறிய கருத்து குறித்து கட்சி மேலிடத்துக்கு புகாா் அளித்துள்ளதாகக் கூறுவதில் உண்மையில்லை.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்றது தொடா்பாக உள்ளூா் காங்கிரஸ் தலைவா்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளாா். அதில் தவறேதுமில்லை.
கிராம பஞ்சாயத்துத் தோ்தல்களை நடத்தவேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கையாக இருந்தது. அதன்படி, முதல்கட்ட கிராம பஞ்சாயத்துத் தோ்தல் நடந்துள்ளது. கிராம பஞ்சாயத்துத் தோ்தலை ஒரேகட்டமாக நடத்தியிருந்தால், செலவு குறைந்திருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.