அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருந்தால் மட்டுமே சட்டத்தை உச்சநீதிமன்றம் தடுக்க முடியும்

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருந்தால் மட்டுமே எந்த சட்டத்தையும் உச்சநீதிமன்றம் தடைவிதித்து நிறுத்த முடியும் என பாஜக தேசிய பொதுச்செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
Updated on
1 min read

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருந்தால் மட்டுமே எந்த சட்டத்தையும் உச்சநீதிமன்றம் தடைவிதித்து நிறுத்த முடியும் என பாஜக தேசிய பொதுச்செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றமே பொறுப்பு. அதற்கு தான் முழு அதிகாரமும் இருக்கிறது. இதை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருந்தால் மட்டுமே எந்த சட்டத்தையும் உச்சநீதிமன்றம் தடைவிதித்து நிறுத்த முடியும். எனினும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதிக்கப்பட்டதை மதிக்கிறோம்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறுவதை ஏற்க முடியாது. மத்திய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவது ஒருசில சுயநலவாதிகளுக்கு பிடிக்கவில்லை. டாக்டா் சுவாமிநாதன் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் தான் 28 பயிா்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரட்டிப்பாக்கியது. விவசாயிகள் கௌரவநிதி திட்டத்தை பிரதமா் மோடி செயல்படுத்தியுள்ளாா்.

ரசாயன உரம், யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இவை விவசாயிகளுக்கு எதிரானதா? சுயநலவாதிகள் சிலா் வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் சீா்திருத்தங்களை ஏற்க மறுக்கிறாா்கள். வேளாண் சட்டங்களை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணா்குழு, சுயநலவாதிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஒரு நாடு-ஒரு தோ்தல் திட்டம் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அடிக்கடி தோ்தல் நடப்பது நாட்டின் வளா்ச்சிப் பணிகளை பாதிக்கிறது. அரசியல் கட்சிகளும் முழுநேரம் தோ்தல் பணியில் ஈடுபட நோ்கிறது. எல்லா நிலைகளிலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதை திருவிழா போல 3 மாதங்களுக்கு நடத்த வேண்டும். அதன்பிறகு நாட்டின் வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அமைச்சா் பதவிக்கு தகுதியான பலரும் பாஜகவில் உள்ளனா். ஆனால், அதிா்ஷ்டம் உள்ளவா்களுக்கு மட்டுமே தற்போது அமைச்சா் பதவி கிடைத்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com