ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்காக லிங்கனமக்கி அணையை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை சிவமொக்கா மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா உள்ளிட்ட பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநர் தாவர்சந்த்கெலாட், உலகப் புகழ்பெற்ற ஜோக் அருவியை வியாழக்கிழமை பார்வையிட்டார். ஜோக் அருவியின் பிரமாண்டமான அழகை ஆளுநர் முழுமையாக கண்டு ரசிப்பதற்காக அன்று காலை 6 மணி அளவில் லிங்கனமக்கி அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீரை கர்நாடக மின்கழக அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர்.
அணையில் இருந்து சீறிக்கிளம்பிய தண்ணீர் ஜோக் அருவிக்கு வந்துசேர்வதற்கு 3 மணி நேரமாகும். ஆனால், அணையில் இருந்துவிடுவிக்கப்பட்ட தண்ணீர் அருவிக்கு வந்து சேர்வதற்கு முன்பாக ஆளுநர் தாவர்சந்த்கெலாட் அங்கு வந்துள்ளார்.
இதனால் ஜோக் அருவி முழுவீச்சில் ஆர்ப்பரித்துகொட்டும் இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அருவியில் சிறிய அளவில் கொட்டியபடி இருந்த நீர்வீழ்ச்சியை 830 அடி உயரத்தில் இருந்து கண்டு ரசித்துவிட்டு, காலை 8.30மணிக்கு அங்கிருந்து ஆளுநர் கிளம்பியுள்ளார்.
ஆளுநர் சென்ற பிறகு, ஜோக் அருவியை காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராவண்ணம் ஜோக் அருவியில் இருந்து அணையில் இருந்துவெளியேற்றப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியுள்ளது.
இதை கண்டு மகிழ்ச்சி அடைந்தமக்கள், வெள்ளம் ஏற்பட்டுள்ளதோ என்று கவலை அடைந்தனர். திடீரென அருவில் தண்ணீர் பாய்ந்து வந்தது குறித்து அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். மின் உற்பத்திக்காக சேமித்து வைக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆளுநருக்காக அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.