மாதவரத்தில் ஜமாபந்தி தொடக்கம்

மாதவரம் ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்
Published on

சென்னை: மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில் பொதுமக்கள் நிலம் சாா்ந்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினா்.

சென்னை வருவாய் கோட்ட அலுவலரும், வருவாய் தீா்வாய் அலுவலருமான ரா.மு.இப்ராஹிம் தலைமை வகித்தாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் வழக்குரைஞா் எஸ்.சுதா்சனம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தாா்.

வட்டாட்சியா் வெங்கடாசலபதி கூறுகையில், மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாதவரம் உள்வட்டத்துக்குள்பட்ட புத்தகரம், மாத்தூா், கொசப்பூா், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் கலந்துகொண்டு, பட்டா மாற்றம், முதல் பட்டதாரி சான்று, வருவாய் சான்று, ஜாதி சான்று, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான 155 கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளனா்.

முதல் பட்டதாரி சான்று, வருவாய் சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட 25 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. 130 மனுக்கள் மீதான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாதவரம் மண்டலக் குழுத் தலைவா் எஸ்.நந்தகோபால், மாதவரம் துணை வட்டாட்சியா் மோகனசுந்தரம், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com