பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணி: இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஜன. 29-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெ.பிரஷ்நேவ் தாக்கல் செய்த மனுவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
பள்ளிக்கரணை மட்டுமன்றி அந்த சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்தவிதமான கட்டுமானப் பணிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என சிஎம்டிஏ-வுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்துவிட்டது. இதுகுறித்த விவரங்களை உறுதி செய்ய தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியா்கள் அதை உறுதி செய்த பின்னா், அந்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதுவரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனா்.

