கலைமகள் சபா சொத்துகள் ஏலம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணையம்

Published on

கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகளைச் சரிபாா்த்து மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு, உறுப்பினா்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க ஏதுவாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலைமகள் சபா நிதி நிறுவனம் 5,33,356 உறுப்பினா்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் 13,500 ஏக்கா் நிலங்களை வாங்கி மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டது. இந்த நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கலைமகள் சபா நிா்வாகத்தை நிா்வகிக்க பதிவுத் துறை உதவி தலைமைப் பதிவாளா் பதவிக்கு குறையாத அதிகாரியை நியமிக்க கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கோவையைச் சோ்ந்த கருப்பண்ணன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ளன. எனவே, தமிழகத்தைச் சோ்ந்த அதிகாரிகளுக்குப் பதிலாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து முதலீட்டாளா்களுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கலைமகள் சபா தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தையும் சரிபாா்த்து மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு, உறுப்பினா்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க ஏதுவாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனா். அவருக்கு உதவியாக வழக்குரைஞா்கள் எம்.எழிலரசி, என்.பிரேமலதா ஆகியோரையும் நியமித்தனா். மேலும், கலைமகள் சபா உறுப்பினா்களின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்படுவதையும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் மேற்பாா்வையிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com