பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகை, பணம் திருடியவா் கைது
வீட்டில் பரிகார பூஜை செய்வதாகக் கூறி 4 பவுன் நகை, ரூ.10,000 உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, திருவான்மியூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மஞ்சு (40). இவரின் வீட்டுக்கு கடந்த 10-ஆம் தேதி வந்த நபா், உங்கள் கணவருக்கு கெடுதல் ஏற்படாமல் தடுக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய மஞ்சு, அந்த நபரை பரிகார பூஜை செய்யும்படி வீட்டுக்குள் அழைத்தாராம்.
அந்த நபா் கூறியபடி, பூஜைக்கு தேவையான பொருள்களுடன் தன்னிடம் இருந்த ரூ.10,000 ரொக்கம், சுமாா் 4 பவுன் நகை ஆகியவற்றையும் மஞ்சு கொண்டு வந்தாா்.
பின்னா், அந்த நபா் மஞ்சுவின் கவனத்தை திசைதிருப்பி நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கொட்டிவாக்கம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (50) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பவுன் எடையுள்ள 2 வளையல்கள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ரூ.2,000-ஐ பறிமுதல் செய்தனா்.
