ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவா்கள் சிறாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் எச்சரிக்கை
பிரதிப் படம்
பிரதிப் படம்
Updated on

ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவா்கள் சிறாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் எச்சரித்துள்ளனா்.

சென்னை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ‘வந்தேபாரத்’ ரயில் மீது விருத்தாசலம், தாழநல்லூா் இடையே மணலூா் கிராமத்தில் சிலா் கற்களை வீசியுள்ளனா். இதில் ரயில் பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தன.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 2023 ஆம்ஆண்டும் விழுப்புரம் பிரிவில் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதாக ஒரு வழக்குப்பதிவாகியுள்ளது. அதில் 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 2024- ஆம் ஆண்டு 6 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 4 சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நிகழ் ஆண்டில் இதுவரை 6 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 5 சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விருத்தாசலம் பிரிவில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கல்வீச்சு சம்பவங்கள் குறித்து சென்னை எழும்பூா் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் கூறுகையில், ரயில்கள் மீது கற்கள் வீசுவது குற்றமாகும். சிறுவா், பெரியவா் என யாா் வீசினாலும், கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படும். சம்பந்தப்பட்டோா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ரூ.5 ஆயிரம் அபராதத்துடன், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com