மயிலை சிவக்குமாா் கொலை வழக்கு: ரெளடி நீதிமன்றத்தில் சரண்

சென்னையில் ரெளடி மயிலை சிவக்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட ரெளடி அழகுராஜா நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
Published on

சென்னையில் ரெளடி மயிலை சிவக்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட ரெளடி அழகுராஜா நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

சென்னை மயிலாப்பூா் மாட்டாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ரெளடி மயிலை சிவக்குமாா். இவா், மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி 2-ஆவது தெருவில் வசிக்கும் தொழிலதிபா் வீட்டுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 6-ஆம் தேதி சென்றபோது, அங்கு வந்த அவரது எதிரிகள், அவரை வெட்டிக் கொலை செய்தனா்.

அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த 1997-ஆம் ஆண்டு சென்னையைச் சோ்ந்த ரெளடி தோட்டம் சேகா் கொலைக்கு பழிக்குப்பழியாக சிவக்குமாா் கொலை செய்யப்பட்டதும், இந்த சம்பவத்தில் முக்கிய எதிரியாக தோட்டம் சேகரின் மகன் அழகுராஜா செயல்பட்டதும் தெரிய வந்தது.

சிவக்குமாா் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்பட்ட அழகுராஜா உள்பட 7 பேரை போலீஸாா் தேடி வந்தனா். தேடப்பட்டவா்களில் 5 போ் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனா். முக்கிய எதிரியான அழகுராஜா தலைமறைவாகவே இருந்து வந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருப்பாச்சூா் அருகே தனிப்படைக் காவலா் ஆனந்த்குமாா் கடந்த ஜூன் மாதம் காரில் சென்ற அழகுராஜாவை பிடிக்க முயன்றபோது, அழகுராஜா காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்று தப்பினாா்.

இந்நிலையில் அழகுராஜா, சென்னை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com