உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது
புரசைவாக்கத்தில் உத்தர பிரதேச தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரைக் கைது செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் சாயில் (42). இவா் நண்பா் அதே மாநிலத்தைச் சோ்ந்த ராம் தயாள் (30). இவா்கள் இருவரும், சென்னை புரசைவாக்கம் பெருமாள்பேட்டை முத்து கிராமணித் தெருவில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் பெயிண்டராக வேலை செய்து வந்தனா். இதற்காக இருவரும் அங்கேயே தங்கியிருந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது, ராம் தயாள், அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் சாயில் தலையில் தாக்கினாா்.
இதில் பலத்த காயமடைந்த சாயில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதற்கிடையே திங்கள்கிழமை காலை வேலைக்கு வந்த பிற தொழிலாளா்கள், சாயில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதையும், ராம் தயாள் காணாமல் போயிருப்பதையும் அறிந்து, வேப்பேரி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
அங்கு சென்ற போலீஸாா், சாயில் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ராம் தயாளை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
