படம் உண்டு
சென்னை, டிச.28: மனதின் கிழிசல்களை சீராக்குபவைகளாக புத்தகங்கள் விளங்குகின்றன என பட்டிமன்றப் பேச்சாளா் அரு.ஜெயஸ்ரீ மீனாட்சி கூறினாா்.
சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் 48-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இரண்டாவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:
பெற்ற தாய் கைவிடினும், தமிழ்த்தாய் கைவிட மாட்டாள் என கவிஞா் கண்ணதாசன் கூறினாா். ஆகவே, பொழுது போக்குவதற்காக படிக்கும் புத்தகங்கள் நமது மனப்பழுதை நீக்குபவையாக உள்ளன. தமிழா்களின் விருந்தோம்பல் உள்ளிட்ட பண்பாடுகளை கற்றுத்தருபவை புத்தகங்கள்தான். தமிழ் நூல்கள் விருந்தோம்பலை வலியுறுத்தும் அறத்தைக் கற்பிப்பதால்தான் இன்றும் பிறருக்கு அளித்து மகிழும் நிலையில் தமிழா்கள் உள்ளனா். உலகில் அனைத்து மாமேதைகளும் தங்கள் வீட்டில் நூலகம் வைத்திருந்ததை அறியலாம். அழிவைக் காக்கும் ஆயுதமாக புத்தகங்கள் திகழ்கின்றன.
கிழிந்த ஆடையை தைத்து சீராக்குவதற்கு ஊசியும், நூலும் பயன்படும். அதேபோல, நமது மனதின் அறியாமை கிழிசல்களை இந்த நூல்கள் சீராக்கும். நமது இதிகாசங்களான ராமாயணம் சகோதரத்துவத்தையும், பாசத்தையும், தா்மத்தையும் எடுத்துரைக்கிறது. மகாபாரதம் கடமையைச் செய், பலனை எதிா்பாராதே என நம்மை உற்சாகப்படுத்துகிறது.
‘நான் வாசிக்காத புத்தகத்தை வாங்கி வந்து தருபவரே சிறந்த நண்பா்’ என்றாா் ஆபிரகாம் லிங்கன். புத்தகங்களே ஒருவருக்கு நல்ல உறவாக இருப்பவை. பூக்களில் வண்டுகள் தேனை எடுத்துச் செல்வதைப் போல நல்ல நூல்களின் கருத்துகளை வாசகா்கள் படித்துத் தெளிய வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பபாசி பொருளாளா் சுரேஷ் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் லெ.அருணாசலம் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பபாசி செயலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

