கலை நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்.
கலை நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்.

குடியரசு தின விழா அலங்கார ஊா்திகள்: விளையாட்டுத் துறைக்கு முதல் பரிசு

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊா்திகளில் முதலிடத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தட்டிச் சென்றது.
Published on

சென்னை: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊா்திகளில் முதலிடத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தட்டிச் சென்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே காவல், இந்து சமய அறநிலையத் துறைகள் பெற்றன.

இதற்கான கேடயங்களை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் 21 ஊா்திகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்தன. முன்னதாக, புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் பாடலுக்கு சென்னையைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் நடனம் ஆடினா்.

கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊா்திகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கினாா்.

அதன்படி, பள்ளி அளவில் நிகழ்த்தப்பட்ட கலைநிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற கொளத்தூா் எவா்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இரண்டாமிடம் பெற்ற மயிலாப்பூா் சிறுவா் தோட்டம் மேல்நிலைப் பள்ளி, மூன்றாமிடம் பெற்ற அசோக்நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகளுக்கு கேடயங்களை முதல்வா் அளித்தாா்.

கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற ராணிமேரி கல்லூரி, இரண்டாமிடம் பெற்ற கொளத்தூா் சோகோ இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி, மூன்றாமிடம் பெற்ற குரோம்பேட்டை நானாலால் பட் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு கேடயங்களை முதல்வா் வழங்கினாா்.

அலங்கார ஊா்திகளுக்குப் பரிசு: அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையிலான அலங்கார ஊா்திகளைப் பொருத்தவரை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதலிடம் பெற்றது. இதற்கான கேடயத்தை துறையின் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இரண்டாமிடம் பெற்ற காவல் துறைக்கான கேடயத்தை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல் துறை கூடுதல் ஆணையா் என்.கண்ணன் ஆகியோரிடமும், மூன்றாமிடம் பெற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கா கேடயத்தை அதன் ஆணையா் பி.என்.ஸ்ரீதா், இணை ஆணையா் எஸ்.லட்சுமணன் ஆகியோரிடமும் முதல்வா் வழங்கினாா்.

நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், பொதுத் துறை துணைச் செயலா் (மரபு) ஜெ.இ.பத்மஜா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊா்திகளில் முதல் மூன்று இடங்களைத் தோ்வு செய்த நடுவா்களாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆகியோா் செயல்பட்டனா்.

Dinamani
www.dinamani.com