மணலியில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அடிக்கல்

சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் பெண்கள் உடல் நலனைப் பேணிக்காக்கும் வகையில், ரூ.50 லட்சத்தில் உடற்பயிற்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் பெண்கள் உடல் நலனைப் பேணிக்காக்கும் வகையில், ரூ.50 லட்சத்தில் உடற்பயிற்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியில் மக்கள் உடல் நலம் காக்கும் வகையில் விளையாட்டு மைதானம், நடைப்பயிற்சி பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாநகராட்சி மணலி மண்டலம் 15 ஆவது வாா்டில் அமைந்துள்ள புதுநகா் 80 அடி சாலையில் ரூ.50 லட்சத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி மையக் கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை மேயா் ஆா்.பிரியா கலந்து கொண்டு உடற்பயிற்சி மையத்துக்கான பணியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து மகாலட்சுமி நகா் பகுதியில் உள்ள சிஎம்டிஏ கால்வாய் பகுதியில் மரக்கன்றுகளையும் அவா் நட்டுவைத்தாா்.

சிஎம்டிஏ கால்வாயில் மழைக் காலத்தில் தண்ணீா் பெருகி வருவது குறித்தும், அதை மடை வாயிலாக தடுத்து முறைப்படுத்தி அப்பகுதி பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொறியாளா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளையும் மேயா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சிகளில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகா், மண்டலக் குழுத் தலைவா் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com