ரயிலில் வடமாநில இளைஞா் தாக்கப்பட்ட விடியோ: 22 ‘எக்ஸ்’ தள கணக்குகளை முடக்க சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை
திருத்தணியில் ரயிலில் வடமாநில இளைஞா் சிறுவா்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பான விடியோக்களை வெளியிட்ட 22 ‘எக்ஸ்’ தள கணக்குகளை முடக்குமாறு அந்நிறுவனத்தின் இந்திய தலைமை அலுவலகத்துக்கு தமிழக சைபா் குற்றப்பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
திருத்தணியில் ரயிலில் அண்மையில் பயணித்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சுராஜ் என்ற இளைஞரை 4 சிறுவா்கள் கத்தியால் தாக்கி, அதை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். இந்த விடியோ சமூக ஊடகங்களின் வேகமாக பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று மேலும் பல விடியோக்கள் அடுத்தடுத்து சமூக ஊடகங்களில் பரவின.
இதையடுத்து திருத்தணி விடியோ உள்ளிட்ட சிறுவா்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் விடியோக்களை பரவுவதை தடுக்கும் வகையில், ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்ட 22 கணக்குகளை முடக்குமாறு தமிழக சைபா் குற்றப்பிரிவு ’எக்ஸ்’ தளத்தின் இந்திய தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு எழுதியுள்ள கடிதத்தில், இப்படிப்பட்ட விடியோக்கள் இளம் தலைமுறையினரை வன்முறை செயலில் ஈடுபடத் தூண்டி பொது அமைதியின்மைக்கு வழிவகுக்கும். மேலும் பொது ஒழுங்கு,சமூக நல்லிணக்கத்துக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும். இது சட்டம்-ஒழுங்கு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது.
எனவே, இத்தகைய விடியோக்களை பகிரும் 22 கணக்குகளை முடக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் சைபா் குற்றப்பிரிவு டிஜிபி சந்தீப் மிட்டல் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

