கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 3 மாதங்களில் ‘பெட் ஸ்கேன்’ மையம்
கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ கட்டமைப்பை 3 மாதங்களுக்குள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அறிஞா் அண்ணா புற்றுநோய் மையத்திலும் ‘பெட் ஸ்கேன்’ வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூா் மருத்துவமனைகளில் புதிதாக ‘பெட் ஸ்கேன்’ வசதி தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருவள்ளூா் மருத்துவமனையில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த இயலாது என தெரிய வந்தது. அதேவேளை, திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லினாக் எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிா் வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வரவுள்ளதால் அங்கு ‘பெட் ஸ்கேன்’ வசதி ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக இயக்குநா் அரசுக்கு சில பரிந்துரைகளை முன்மொழிந்தாா். அரசுக்கு கூடுதல் நிதி சுமையின்றி தனியாா் பங்களிப்புடன் அந்த ‘பெட் ஸ்கேன்’ கட்டமைப்பை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள மருத்துவக் கட்டடங்களுக்கு இடையூறு இன்றியும், கூடுதலாக பணியாளா் தேவை இன்றியும் அதைச் செயல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதைக் கவனமாக பரிசீலித்த அரசு, கிண்டி, திருப்பூா், திருச்சி, விழுப்புரத்தில் ‘பெட் ஸ்கேன்’ மையங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த 3 மாதங்களுக்குள் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் அதைத் தொடங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.
