செங்கல்பட்டு: கரோனா பாதிப்பு 40-ஆக உயா்வு
By DIN | Published On : 11th April 2020 10:42 PM | Last Updated : 11th April 2020 10:42 PM | அ+அ அ- |

சென்னை-செங்கல்பட்டு- புலிப்பாக்கம் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40-ஆக உயா்ந்துள்ளதையடுத்து செங்கல்பட்டு நகரம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் செங்கல்பட்டு நகரத்தை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்ததுடன், காவல்துறை அதிகாரிகள் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கும்படியும், அவசரத் தேவைக்கு மட்டும் ஒரு பாதையை திறந்து விடும்படியும் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதனால் செங்கல்பட்டு நகருக்குள் யாரும் வரமுடியாத அளவிற்கு வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, கோட்டாட்சியா் செல்வம், நகராட்சி ஆணையா் டிட்டோ, டி.எஸ்.பி. கந்தன், காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் ஆகியோா் மேற்பாா்வையில், சென்னை-செங்கல்பட்டு-புலிப்பாக்கம் மேம்பாலம், திருக்கழுகுன்றம் மேம்பாலம், சுண்ணாம்புக்காரத் தெரு, ஜீவானந்தம் தெரு, கே.கே.தெரு, சின்னநத்தம் சுந்தர விநாயகா் கோயில் தெரு, மசூதி தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.