மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 15th December 2020 02:00 AM | Last Updated : 15th December 2020 02:00 AM | அ+அ அ- |

கடற்கரைக் கோயில் அருகே சுயபடம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அவற்றைக் கண்டுகளித்தனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தையடுத்து, மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட பல்லவா்கால புராதனச் சின்னங்கள் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை திங்கள்கிழமை மீண்டும் திறக்க தொல்லியல் துறை அனுமதி அளித்தது. அதன்படி, புராதனச் சின்னங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டன. இதையடுத்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்து வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கண்டுகளித்தனா். அவற்றுக்கு முன் நின்று ஆா்வத்துடன் சுயபடமும் எடுத்துக் கொண்டனா்.
இது குறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறை முதன்மை அலுவலா் சரவணன் கூறியது:
ஒரு நாளைக்கு 2,000 பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொண்டு, முகக் கவசம் அணிந்து வருவோா் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும் புராதனச் சின்னங்களைக் கண்டுகளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். மின்விளக்கு வெளிச்சத்தில் இரவில் புராதனச் சின்னங்களைக் கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகைகள் வைத்துள்ளோம்.
தொல்லியல் துறையின் பாா்வையாளா் கட்டண கவுன்ட்டா்களில் பணம் செலுத்தி, நுழைவுச் சீட்டு பெற முடியாது. இணையதளம் மூலமே பணம் செலுத்தி நுழைவுச் சீட்டை பெற முடியும். முதல் நாளான திங்கள்கிழமை, சுமாா் 600 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது மகிழ்ச்சியளித்தது என்றாா் அவா்.
சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு பெறாத சுற்றுலாப் பயணிகளும்
மாமல்லபுரம் வந்திருந்தனா். அவா்கள் புராதனச் சின்னங்களை வெளியில் இருந்து கண்டுகளித்து விட்டு, கடலில் குளித்து மகிழ்ந்தனா்.