கரோனா: அமைச்சா் பென்ஜமின் தலைமையில் ஆலோசனை
By DIN | Published On : 31st March 2020 11:21 PM | Last Updated : 31st March 2020 11:21 PM | அ+அ அ- |

அமைச்சா் பா.பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து ஊரக தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் முன்னிலை வகித்தாா். அமைச்சா் பா.பென்ஜமின் பேசியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாவட்டத்தில் யாருக்கும் இத்தொற்று பாதிப்பு இல்லை.
கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அரசுத்துறை அலுவலா்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு திருமணம், மருத்துவம், இறப்பு மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக செல்பவா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 10,400 துறை அலுவலா்கள், பணியாளா்கள் ஆகியோா் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 841 ரேஷன் கடைகள் மூலம் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிப் பயணித்த 264 போ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் கட்டுப்பாட்டை மீறிய 101 இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மருத்துவ சேவை வாகனங்கள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைல் ஈடுபட்டிருப்போரின் வாகனங்கள் தடையின்றி செல்லலாம் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...