செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர் சிலர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் புதன்கிழமை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் மீண்டும் இம்மாதம் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளியின் தாளாளராக இருந்து வந்தவர் சிவசங்கர்பாபா. இவர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர் சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்திருந்தனர்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் பாபாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவியர்கள் கொடுத்த புகாரின் மீது 4 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்திலும் நடந்து வந்தது.
தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவும் போக்ஸோ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் 4 போக்ஸோ வழக்குகளில் முதல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் சிவசங்கர் பாபாவை புதன்கிழமை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி சிவசங்கர்பாபாவை மீண்டும் வரும் 22 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு உதவி செய்த அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் சுஷ்மிதா, தீபிகா, பாரதி ஆகியோர் உட்பட 4 பேரையும் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.