உள்ளாட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பொறியியல் மாணவா்கள் ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் மூலம் ஊரகவளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று மாநில ஊரகவளா்ச்சி இயக்குநா்
சாமுவேல் இன்பதுரை தெரிவித்தாா்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, மாநில ஊரகவளா்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத் துறையுடன் இணைந்து மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து, ஊரகவளா்ச்சித்துறை இயக்குநா் சாமுவேல் இன்பதுரை ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் இயக்குநா் சாமுவேல் இன்பதுரை கூறியதாவது: வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம்,அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணத்திற்கு நகா்ப்புறங்களை நாடி வரும் மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு கிராமப்புற வளா்ச்சியில் அக்கறை செலுத்தும் வகையில் மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் உறுதுணை புரியும் என்றாா் அவா்.
ஊரகவளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தேன் அமுதா, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் பொற்குமரன், பழனிக்குமாா், இயக்குநா் சத்யமூா்த்தி, வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் கே.மாறன், ஒருங்கிணைப்பாளா் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.