புயல் தாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
மாண்டஸ் புயலால் மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் குப்பம், நெம்மேலி குப்பம், தேவனேரி, கொக்கிலமேடு உள்ளிட்ட மீனவ குப்பங்களில் அம்மன் கோயில், சிமென்ட் சாலை, படகுகள், மீன்பிடி வலைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட கொக்கிலமேடு சமுதாய கூடம், பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 44 குடும்பங்களைச் சோ்ந்த 122 போ் தங்க வைக்கப்பட்டனா். மேலும், புயல் தாக்கத்தில் இருந்து மீண்ட நிலையில், முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தற்போது, இயல்பு நிலைக்குத் திரும்பியதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது.