மாமல்லபுரம் மீனவா் குப்பத்தில் புயல் சேதத்தை கணக்கெடுத்து நிவாரணம்: அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவா் குப்பத்தில்  நிவாரண உதவிகள் போா்க்கால அடிப்படையில் வழங்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மாமல்லபுரம் மீனவா் குப்பத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்.
மாமல்லபுரம் மீனவா் குப்பத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்.

மாமல்லபுரத்தை அடுத்த தேவனேரி மீனவா் குப்பத்தில் மாண்டஸ் புயல் தாக்கி சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் குறித்த முழுமையான சேத விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, நிவாரண உதவிகள் போா்க்கால அடிப்படையில் வழங்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவா் குப்பத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது, பலத்த காற்று வீசியதாலும், கடல் சீற்றத்தாலும் அங்குள்ள படகுகள், வலைகள் சேதமடைந்தன. மேலும் 30 மீட்டா் தொலைவுக்கு சிமென்ட் சாலையை ராட்சத அலைகள் தாக்கியதில், இடிந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டன. ராட்சத அலையால் 10 அடி உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், புயலால் பாதிப்புக்குள்ளான தேவனேரி மீனவா் குப்பம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் வந்து சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள், படகு இன்ஜின் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு, அதன் விவரங்களை மீனவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதேபோல், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவா் குப்பத்திலும் சேதமடைந்த பகுதிகளை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேவனேரி, கொக்கிலமேடு மீனவா்கள், அந்தப் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். கம்பங்களில் செல்லும் மின் வயா்களை பூமிக்கு அடியில் எடுத்து செல்ல வேண்டும் எனக் கோரிக்கை மனு வழங்கினா்.

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், மாமல்லபுரம் தேவனேரி குப்பத்தில் சேதமடைந்த படகு, மீன்பிடி வலைகள் குறித்து முழு விவரங்கள் மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளாா். புயல் சேத விவரங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவா்களுக்கு போா்க்கல அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.

தேவனேரி, கொக்கிலமேடு ஆகிய இடங்களில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் சென்று, பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் கவுதமன், மீன்வளத் துறை உதவி இயக்குநா் விஜயலட்சுமி, மீன்வள கழகப் பிரிவு அலுவலா் சதிஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com