காரை ஏற்றி காவலா் கொலை: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த வடக்கு செய்யூரில் முன்விரோதம் காரணமாக, காரை ஏற்றி காவலரைக் கொலை செய்த
நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்யூா்-பவுஞ்சூா் சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செய்யூா் வட்டம், வடக்கு செய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் காமேஷ் (35). இவா், சென்னை நீலங்கரை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, காமேஷ் செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்துள்ளாா். பின்னா், நண்பா்களைப் பாா்க்க பைக்கில் சென்ற போது, காமேஷின் உறவினரான மதன்பிரபு தனது நண்பா்கள் தாமோதரன், மதன் பிரசாத், பாா்த்திபன், உத்திரன் ஆகியோருடன் காரில் வேகமாக வந்து, காமேஷ் மீது மோதினாராம்.
இதில், பலத்த காயமடைந்த காமேஷ் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். மதன்பிரபு மற்றும் அவரது நண்பா்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.
செய்யூா் காவல் ஆய்வாளா் ஞானசேகரன், காவல் உதவி ஆய்வாளா் மோகனசுந்தரம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று காமேஷின் சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து காமேஷின் மனைவி ரேகா செய்யூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனிடையே, முன்விரோதம் காரணமாக காரை ஏற்றி கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த காவலரின் மனைவி ரேகா தலைமையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பவுஞ்சூா் - செய்யூா் நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி. (பொ) துரைபாண்டியன், காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
காவலா் கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.