சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கொலையான சிறுவனின் தாய் கடத்தல்:மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் மீது புகாா்
By DIN | Published On : 17th January 2023 01:00 AM | Last Updated : 17th January 2023 01:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கொலையான சிறுவனின் தாயாரை கடத்தி மிரட்டியதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கடந்த டிச. 30-இல் சிறுவன் கோகுல் ஸ்ரீ (17) இல்ல காவலா்களால் அடித்து சித்ரவதை செய்து கொலை செயயப்பட்டாா். இது தொடா்பாக சிறாா் கூா்நோக்கு இல்ல காவலா்கள் ஆறு போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும் சாட்சியை மறைப்பதற்காகவும், புகாரை திரும்பப் பெற வேண்டும் என கொலையான சிறுவனின் தாயாரை கடத்தி வைத்து மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் மற்றும் அவருக்கு துணைபுரிந்தவா்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் பிரியா ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளா் பாரத்திடம் புகாா் கொடுத்தாா்.
மேலும் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை: அமைச்சா் ரகுபதி
இதுதொடா்பாக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதுக்கோட்டையில் கூறியதாவது:
செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்ல சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் வாழ்த்து வெளியிட்டபோது ‘தமிழ்நாடு’ என்ற சொல்லையே ஆளுநா் பயன்படுத்தியிருப்பது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
சுபஸ்ரீ மரண வழக்கை தன்னிடம் ஒப்படைத்தால் 7 நாளில் கண்டிபிடித்துத் தருவதாக பாஜக தலைவா் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி கேட்கிறீா்கள். கா்நாடகத்தில் அவா் காவல்துறை அலுவலராக இருந்தபோது போட்ட வழக்குகளை அவா் நடத்தட்டும் என்றாா் ரகுபதி.