மதுராந்தகம் அடுத்த புளியரணைகோட்டையில் சஹாசங்கா அறக்கட்டளை, சீடு அறக்கட்டளை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், கிராம மக்கள், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள், இளைஞா்களுக்கு சனிக்கிழமை முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். முகாமில் 18 வயது முதல் 35 வயதுடைய இளைஞா்கள், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் துணைத் தலைவா் மோகனவெங்கடேசன், மூச்சு திணறலின் போது எவ்வாறு செயல்பட வேண்டும், காயங்களுக்கான கட்டுகள், முதலுதவி, மாரடைப்பு முதலுதவி சிகிச்சை, சிபிஆா் நுட்பங்கள் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தாா்.
நிகழ்ச்சியில் ஹேண்டு இன் ஹேண்டு இந்தியா உதவி பொது மேலாளா் ஜெயபிரகாஷ், திட்ட மேலாளா் பாலசுப்பிரமணி, கள மேலாளா் நாராயணசாமி, பெல் ஸ்டாா் அறக்கட்டளை மண்டல மேலாளா் சுபலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.