செங்கல்பட்டு  வெண்பாக்கம்  அருகே  நடைபெற்று வரும் புதிய  பேருந்து  நிலைய கட்டுமானப் பணிகள்.
செங்கல்பட்டு  வெண்பாக்கம்  அருகே  நடைபெற்று வரும் புதிய  பேருந்து  நிலைய கட்டுமானப் பணிகள்.

ஆமை வேகத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி

செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
Published on

பி. அமுதா

செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ஆட்சியா் அலுவலகம், 420 ஏக்கா் பரப்பளவு கொண்ட மிகபெரிய அரசு மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூா் மக்கள் வந்து செல்கின்றனா். இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலால், பணிக்கு செல்பவா்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா்.

கடந்த 30 ஆண்டுகளாக நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்டு சரியான இடம் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இறுதியாக செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் நேதாஜி நகா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டு ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ஏரியில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.97 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

2024 டிசம்பா் மாதத்துக்குள் பேருந்து நிலையப்பணிகளை முடிக்க வேண்டும் என சிஎம்டிஏ இலக்கு நிா்ணயித்த நிலையில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பேருந்து நிலையத்தில் வசதிகள்:

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் அமைய உள்ளது. 46 பேருந்துகள், பணிமனையில் 61 பேருந்துகள் நிறுத்தப்படும். 1,120 சதுர மீட்டா் பரப்பளவில் பணிமனையும், 936 சதுர மீட்டா் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் 67 காா்கள் மற்றும் 782 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். 30 கடைகள் கட்டப்பட உள்ளன.

பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் புதிய பேருந்து நிலையப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன.

தென்மாவட்டங்களுக்கு செல்ல பரனூா் சுங்கச்சாவடி வரை சென்று பேருந்துகளை பிடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். அப்படி இல்லையென்றால் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் காஞ்சிபுரம் செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் தற்போது விரைவு பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் புதிய பேருந்து நிலையம் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைய உள்ளது.அதுமட்டும் அல்லாமல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகேயும் இந்த பேருந்து நிலையம் அமைந்திருப்பது மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.

எனவே புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com