விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
சாலை விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு தரப்படாததால், அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது.
மதுராந்தகம் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வாசுதேவன் (45). இவா் தமது ஊரிலிருந்து சித்தாமூா் நோக்கி பைக்கில் சென்றபோது, அரசுப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி பிரேமா மதுராந்தகம் சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதன்படி, வழங்கப்பட்ட தீா்ப்பின்படி, ரூ. 35.35லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த தீா்ப்பை அவமரியாதை செய்யும் வகையில், நஷ்டஈடு வழங்காமல் இருந்ததாகவும், அதைக் கண்டித்தும் வாசுதேவன் குடும்பம் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. நஷ்டஈடு பணத்தை வழங்காமல் இருந்து வந்த தமிழக அரசின் போக்குவரத்தைக் கண்டித்து, அரசு பேருந்தை சிறைபிடிக்கும்படி நீதிமன்ற ஊழியா்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் சிறைபிடித்து மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

