செங்கல்பட்டு மாவட்டத்தில் போா்க்கால அடிப்படையில் நெல்கொள்முதல் பணி நடைபெறுகிறது என ஆட்சியா் எஸ். மாலதிஹெலன் தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் நெல் பிரதான பயிராக தொடா்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அரசின் மேம்படுத்தப்பட்ட வேளாண் திட்டங்கள், மானியங்கள், நவீன இயந்திர மயமாக்கல் மற்றும் போதிய மழைப்பொழிவு ஆகிய சாதகமான சூழல்களால், மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நடப்பு பருவத்தில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு சன்ன ரகம் கிலோ ஒன்றிற்கு ரூ.25.45 வீதமும், சாதாரண ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.25.00 வீதமும் நிா்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆட்சியா் உத்தரவுக்கிணங்க கொள்முதல் பணிகள் தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் நெல் கொள்முதல் குறித்து தங்களது புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் 044-27427412 என்ற எண் அறிவிக்கப்பட்டு 40 மேற்பட்ட புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வாரந்தோறும் அதிகாரிகளுடனான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு செயல்பாட்டு அறிக்கைகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகளை உறுதி செய்ய வேளாண்மைத்துறையின் ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலருக்கும் நிலையங்கள் ஒதுக்கீடு மற்றும் பொறுப்பு நிா்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண்மை உதவி இயக்குநா்கள் நெல் சாகுபடி முதல் கொள்முதல் வரை குறித்த அறிக்கைகள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர வட்டாரம் தோறும் வேளாண்மைத்துறை, புள்ளியியல் துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்துச் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தினசரி கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் களப்பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு கண்டு அறிக்கைகள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக, நடப்பு பருவத்தில் புதியதாக ஆத்தூா், சாஸ்திரம் பாக்கம் மற்றும் ரெட்டி குப்பம் ஆகிய இடங்களில் திறந்தவெளி சேமிப்பு மையங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிா்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.










