டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சங்க கால தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றப்போகும் அண்ணா நூலகம்

சென்னை, ஏப். 24: சங்க காலத் தமிழ் கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியம், சமூக அமைப்பு ஆகியவற்றை பறைசாற்றும் வகையில், பல்வேறு அரிய தகவல்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வைக்கப்பட உள்ளன. தமிழ்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:41 am

சென்னை, ஏப். 24: சங்க காலத் தமிழ் கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியம், சமூக அமைப்பு ஆகியவற்றை பறைசாற்றும் வகையில், பல்வேறு அரிய தகவல்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வைக்கப்பட உள்ளன.

தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, சில்லு உள்ளிட்ட விளையாட்டுகளையும், கரகாட்டம், ஏற்றம் இறைக்கும் (கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது) பாட்டு, கதிர் அறுக்கும் பாட்டு ஆகிய பாரம்பரிய கலைகள் குறித்தும் அடுத்த தலைமுறையினர் அறிந்திருப்பது கடினம். அடுத்த 100 ஆண்டுகளில் இவை முழுவதும் மறைந்துபோகும் நிலைதான் உள்ளது.

இதைத் தடுத்திடும் வகையில் சங்க கால தமிழ் கலாசாரம், பண்பாடுகளை வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில், சிறந்த முயற்சியைப் பொது நூலகத் துறை எடுத்து வருகிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் அமையவுள்ள இந்த 8 அடுக்கு மாடி நூலகத்தின் 3-வது தளத்தில் இந்த அரிய பொக்கிஷங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து பொது நூலகத்துறை இயக்குநர் க. அறிவொளி கூறியது:

பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை பதிவுகளாக வைப்பதுதான் இதன் நோக்கம். பல்லாங்குழி எப்படி இருக்கும்? விளையாடுவது எப்படி? இதுபோல் தாயம், ஆடுபுலியாட்டம், சில்லு, அம்மானை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய  விளையாட்டுகள் விளையாடுவது எப்படி என்ற விவரங்களும், சிலம்பாட்டம், கரகாட்டம், கதிர் அறுக்கும் பாட்டு, கும்மி பாட்டு உள்ளிட்ட கலைகள் குறித்த விவரங்களும் படங்களுடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட உள்ளன.

இதுபோல் கும்மி அடிப்பது எப்படி? புதிர் விளையாட்டு மற்றும் பாட்டி விடுகதைகள் என்ற தலைப்பில் பாட்டி ஒருவரே விடுகதைகள் கூறுவதுபோன்ற விடியோ காட்சிகளும் இடம்பெற உள்ளன. நூலக ஊழியர்களைக் கொண்ட குழுக்கள், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இந்த விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு மட்டும் அல்லாமல், கலை பண்பாட்டுத் துறை ஆராய்ச்சி  மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். அடுத்த 100 ஆண்டுகளில்தான் இந்த தகவல் பொக்கிஷத்தின் உண்மையான தாக்கம் தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.