மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், ரூ.299-க்கு இணையவழியில் ஆடை ஒன்றை வாங்க முயன்றபோது, அவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின்படி, முகநூல் விளம்பரம், வாட்ஸ்ஆப் எண் மற்றும் போலி விநியோக முகவர் (ஃபேக் டெலிவரி ஏஜெண்ட்) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
“பாதிக்கப்பட்ட அந்த செவிலியர், தனது புகாரில், முகநூலில் வெறும் 299 ரூபாய்க்கு ஆடைகள் வழங்கப்படுவதாக ஒரு விளம்பரத்தைப் பார்த்ததாகவும், பின்னர் அதில் ஒரு ஆடையை வாங்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.
மறுமுனையில் இருந்த நபர் முதலில் ஆடைக்கான பணத்தைக் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஷிப்பிங் கட்டணம், ஜிபிஎஸ் கட்டணம், கண்காணிப்புக் கட்டணம், சரிபார்ப்புக் குறியீடுகள் மற்றும் முகவரி உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி செவிலியரிடம் தொடர்ந்து பணம் பறித்துள்ளார்.
ஏப்ரல் 16 முதல் 20 வரை ஐந்து நாள்களிலேயே ரூ. 1 லட்சம் செலுத்தியதாகவும், பெரும்பாலான பணம் திருப்பித் தரப்படும் என்றும், ஆர்டர் டெலிவரி செய்யப்படும் என்றும் தனக்கு மீண்டும் மீண்டும் நம்பிக்கை அளிக்கப்பட்டதாகவும் அந்த செவிலியர் தெரிவித்தார்.
எதுவும் நடக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், 1930 என்ற இணையக் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.
இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







