/

இணைய வழி மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இணைய வழி மோசடியில் மீட்கப்பட்ட ரூ.13.50 லட்சத்தை பாதிக்கப்பட்ட செல்வின் ஜெயக்குமரனிடம் ஒப்படைத்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் .

News image
Updated On :12 ஜூன் 2026, 1:12 am IST

இணையவழி மோசடியில் இழந்த பணத்தில் ஒரு பகுதி போலீஸாரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த செல்வின் ஜெயக்குமரன். இவரது ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் வந்த விளம்பரத்தை நம்பி, அவற்றில் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு ரூ. 43.50 லட்சத்தை செலுத்தினாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்களை பின்னா், செல்வின் ஜெயகுமரன் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா் பணம் செலுத்திய வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தனா். இதன்மூலம், ரூ 13.50 லட்சத்தை மோசடி நபா்கள் எடுக்க முடியாத வகையில் முடக்கி வைத்தனா். பின்னா் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் ரூ.13.50 லட்சம் மீட்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா் .சிவபிரசாத் ரூ.13.50 லட்சத்தை செல்வின் ஜெயக்குமரனிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.