குடும்பத் தலைவிகள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள்; அவர்களது பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்பு என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகள் மேற்கொள்ளும் பணியானது, இல்லத்தரசிகள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள் நாட்டைக் கட்டமைப்பவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டைத் தீர்மானிக்கும்போது, ஊதியம் பெறாமல், அவர்கள் மேற்கொள்ளும் வீட்டு வேலைகளின் மதிப்பை மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 என கணக்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இல்லத்தரசிகள் "தேசத்தை உருவாக்குபவர்கள்" என அங்கீகரிக்கப்படத் தகுதியானவர்கள் என்றும் அது அறிவித்தது.
நாடு முழுவதும் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கக் கோரிய ஒரு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இல்லத்தரசிகளின் தோராயமான வருவாயை திறன்மிக்க தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு உருவாக்கும் நீண்டகால நடைமுறையை நிராகரித்துவிட்டது.
இதுபோன்ற அணுகுமுறை, வீட்டுப் பராமரிப்புப் பணிகளின் உண்மையான பொருளாதார மற்றும் சமூக மதிப்பைப் பிரதிபலிக்கத் தவறிவிடுகிறது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், "நாங்கள் ஒரு புதிய வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளோம்; அதன்படி, பிரணாய் சேத்தி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் கீழ் கிடைக்கக்கூடிய பிற இழப்பீடுகளுடன் கூடுதலாக, வீட்டுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட இல்லத்தரசிகளின் இழப்பிற்கான மதிப்பை மாதத்துக்கு குறைந்தபட்சம் 30,000 என நிர்ணயித்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற குடும்பத் தலைவி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாலை விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பைப் பிறப்பித்துள்ளது. சாலை விபத்துக்கு இழப்பீடு கோரி, அப்பெண்ணின் கணவரும் மூன்று பிள்ளைகளும் சாலை விபத்து தீர்ப்பாயத்தை அணுகினர். பிறகு இவர்கள் உயர் நீதிமன்றங்களையும் நாடினர். ஆனால், விபத்து நடந்து 20 ஆண்டுகளுக்குப் பின், இந்த வழக்கு நீதிமன்றங்களில் முறைப்படி விசாரணைக்கு வந்தது.
இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், சாலை விபத்து வழக்குகளில் ஓராண்டுக்குள் இழப்பீடு குறித்து முடிவெடுத்துஅறிவிக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களும் இதில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். குடும்பத் தலைவர்களின் பணி மதிப்பு பொருளாதார ரீதியாக மதிப்பிடப்படாமல், அவர்கள் வேலை செய்யாத பணியாளர்களைப் போலவே கருதுகிறது.
இதுபோன்று சில வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், இல்லத்தரசிகளுக்கு முறைப்படி ஊதியம் கொடுப்பதில்லை என்பதற்காக அவர்களது பணியை குறைத்து மதிப்பிடக்கூடாது, அவர்கள் குடும்பத்தில் செய்யும் வேலைக்கு மதிப்பிட முடியாத அளவுக்கு மதிப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.
Summary
Homemakers are the ones who build the nation; the Supreme Court has observed that their work is worth ₹30,000 per month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








