மணல் திட்டாய் மாறி வரும் பழவேற்காடு ஏரி
பொன்னேரி, மார்ச் 2 : முகத்துவார அடைப்பு, முறையாக தூர்வாரப்படாத உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான பழவேற்காடு ஏரி தற்போது மணல் திட்டாய் மாறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில்


பொன்னேரி, மார்ச் 2 : முகத்துவார அடைப்பு, முறையாக தூர்வாரப்படாத உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான பழவேற்காடு ஏரி தற்போது மணல் திட்டாய் மாறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 20 மீனவ கிராம மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தி கடலோரத்தில் அமைந்துள்ளது பழவேற்காடு கிராமம். இதைச் சுற்றிலும் கூனங்குப்பம், சாத்தங்குப்பம், லைட் ஹவுஸ் குப்பம், கோரைக்குப்பம், அரங்கம்குப்பம், பசியாவரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் 25-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக மீன் பிடித் தொழில் விளங்கி வருகிறது. மேலும், பழவேற்காடு பகுதி ஏரியும், கடலும் சூழ்ந்த தீவு பகுதியாக விளங்கி வருகிறது. பழவேற்காடு ஏரி 15 கி.மீ. நீளமும், ஒன்றரை கி.மீ. அகலமும், 18 மீட்டர் ஆழமும் உடையதாகும்.
நம் நாட்டிலேயே முதலாவது பெரிய ஏரியாக விளங்கும் ஒரிசா மாநிலம், சில்கா ஏரிக்குப் பிறகு 15, 367 ஏக்கர் பரப்பளவுக்கு ஆந்திர மாநிலம் வரை பரந்து விரிந்துள்ள பழவேற்காடு ஏரி நம் நாட்டின் 2-வது பெரிய ஏரியாகக் கூறப்படுகிறது.÷ஆங்கிலேயர் காலத்தில் பக்கிங்காங் கால்வாய் என அழைக்கப்பட்டு இந்த ஏரியில் படகு போக்குவரத்து மூலம் வியாபாரம் நடந்துள்ளது. இதற்காக இந்த ஏரியை ஆங்கிலேயர்கள் தூர் வாரும் இயந்திரம் மூலம் அடிக்கடி தூர் வாரி ஆழப்படுத்தியுள்ளனர்.
இங்குள்ள ஏரியில் 150 வகையான மீன் வகைகள், பல வகையான இறால் வகைகள் மற்றும் கடல் தாவரங்கள், கடல் உயிரினங்கள் அதிகளவில் உள்ளன. மேலும், இங்குள்ள ஏரியில் பிடிக்கப்படும் இறால்கள் மிகவும் சுவையாக இருப்பதன் காரணமாக அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஏரி கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக முறையாக தூர் வாரப்படாததால் ஏரியில் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் ஏற்பட தொடங்கி, அதன் காரணமாக ஏரியின் ஆழமும் குறையத் தொடங்கியுள்ளது. அத்துடன் ஏரியும் கடலும் இணையும் இடமாக உள்ள முகத்துவாரத்திலும் மணல் திட்டு ஏற்படுவதால் அடைப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இயற்கையாக 6 மணி நேரத்துக்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கு வருவதும் ஏரி நீர் கடலுக்கு செல்வதிலும் அடைப்பு ஏற்பட்டுதன் காரணமாக ஏரியில் நீர் பெறுமளவில் குறைய தொடங்கியுள்ளது. இதனால், ஏரியில் மீன், இறால் ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலும், ஏரியும் இணையும் முகத்துவார பகுதிகளையும், ஏரியையும் தூர் வாரி ஆழப்படுத்தினால் மட்டுமே தங்களின் மீன் பிடி வாழ்வாதாரத்தைக் காக்க முடியும் என இங்குள்ள மீனவ மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
துருப்பிடித்த நிலையில் தூர் வாரும் இயந்திரம்: ஆங்கிலேயர் ஆட்சியில் பழவேற்காடு ஏரியை தூர் வார பயன்படுத்தப்பட்ட இயந்திரம். தற்போது ஏரிக்கரையோரம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏதும் இன்றி கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது.
அந்த இயந்திரத்தின் நடுவே இங்கிலாந்து என்பதை குறிப்பிடும் ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முழுக்க இரும்பு இயந்திரமான அதில் ஆச்சரியப்படும் வகையில் இயந்திரத்தின் வடிவமைப்பில் சில இடங்களில் பாறை வகை கற்களையும் கொண்டு அமைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட இந்த தூர் வாரும் இயந்திரத்தை எதிர் கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இதை நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...