விளக்கம்: கண்ணழகு மிகுந்தவன் கண்ணன். அவனைத் தாமரைக் கண்ணன் என்றும் கூறுவார்கள். கண்ணனையும் இராமனையும் சேர்த்துப் பாட இசைந்து, இப் பாடலில் "புள்ளின் வாய்க் கீண்டானை' என்று கண்ணனையும், 'பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை' என்று இராமனையும் பாடினார்கள். கண்ணன் மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு நீர்நிலைக்குச் செல்லும்போது, கம்சனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் கொக்கு வடிவத்தில் இருந்துகொண்டு கண்ணனருகில் ஓடிவந்தான். கண்ணன் அந்தப் பகாசுரன் மீது பாய்ந்து அதன் அலகுகளை இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்ற நிகழ்ச்சியையும், ராமன், பொல்லாவரக்கனான ராவணனை எளிதில் அழித்த வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டே எல்லாப் பெண்களும், ஒன்றுசேரும் இடமாகிய பாவைக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள். வானத்தில் வியாழன் நட்சத்திரம் மறைந்து வெள்ளியும் தோன்றிவிட்டது. பறவைகளும் சிலம்புகின்றன. இத்தகைய நல்ல வேளையில் யமுனையாற்றில் குள்ளக்குளிர அமிழ்ந்து நீராடாமல் படுத்திருக்கிறாயே! இது ஒரு நன்னாள்! தனிமையில் கொள்ளும் இறையின்பமும் கள்ளம். இப்படிப்பட்ட கள்ளம் தவிர்த்து எங்களோடு சேர்ந்து கண்ணனை அனுபவிக்கலாம் எழுந்து வா! என்று அழைக்கிறார்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது. இப் பாசுரம் "திருக்குடந்தை' என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது. இப்பாசுரத்தின் வழி எழுப்பப்படுபவர் "தொண்டரடிப்பொடியாழ்வார்' என்பர்.