சென்னை ஏரிகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

வடகிழக்குப் பருவ மழை சரிவரப் பெய்யாததால் சென்னை குடிநீர்
Updated on
1 min read

வடகிழக்குப் பருவ மழை சரிவரப் பெய்யாததால் சென்னை குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் இருந்துதான் சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து போனதால் இந்த ஏரிகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை. இந்நிலையில் வட கிழக்குப் பருவமழையாவது சரியான நேரத்தில் பெய்யும் என  காத்திருந்த மக்களுக்கு இதுவரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் குறைந்ததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என ஆந்திர அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

பருவமழை போதிய அளவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும், சென்னை ஏரிகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏரிகளில் இருந்த நீர்மட்டத்தைவிட இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தது:

இந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை சரிவரப் பெய்யவில்லை.

வெப்பச்சலனம், காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாகவே சில நாள்கள் சென்னையில் மழை பெய்தது. பருவமழை தீவிரமடைந்தால் மட்டுமே குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டம் கணிசமாக உயரும்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏரிகளின் நீர்மட்டம் பல அடி குறைந்துள்ளது.  பருவமழைக் காலம் முடிந்த பின்னரே குடிநீர் தேவை மற்றும் தட்டுப்பாடு குறித்து கூற முடியும் என்றனர். தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சில நாள்களுக்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழைக் காலம் முடிய இன்னும் சில வாரங்களே உள்ளன.

தென்மேற்கு பருவமழையைப் போல வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனால் வரும் கோடை காலத்தில் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

நீர்ஆதாரம் 2011 டிசம்பர் 2-ல்2012 டிசம்பர் 2-ல்

நீர்மட்டம் (அடி) நீர்மட்டம் (அடி)

பூண்டி32.92 24.53

சோழவரம்17.42 8.39

புழல்19.8514.54

செம்பரம்பாக்கம்20.3012.68

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com