விளக்கம்: நந்தகோபரின் மாளிகை நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது. அதில் முதற் கட்டில் படுத்திருக்கும் நந்தகோபரை, உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் வாரிவழங்கும் வள்ளலே! எழுந்திரு! என்று எழுப்பினர். அடுத்த அறைக்குச் சென்று, பெண்கள் குலத்துக்கே கொழுந்து போன்றவளே! குலவிளக்கே! எங்கள் தலைவியே எழுந்திரு! என்று யசோதையை எழுப்பினர். ஒரு சமயம் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று, மூவடி மண்கேட்டு, பெரிய உருவங்கொண்டு மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட தேவாதி தேவனே! உறங்காதே எழுந்திரு என்று எழுப்பி, அடுத்த அறைக்குச் சென்றனர். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் உறங்காதே எழுந்திருங்கள் என்கின்றனர். இந்தப் பாசுரம் ஸ்ரீநந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும்.