விளக்கம்: கறவைகள் பால் கொடுக்கிறபடியால், காலையில் எழுந்து அவற்றை மேய்த்துக்கொண்டு காட்டிற்குச் சென்றுவிடுவோம். அவற்றோடு இருப்போம். அங்கேயே உண்போம். ஞானம் என்பதே இல்லாத ஒரு குலம். அப்படிப்பட்ட எங்கள் குலத்தில் நீ வந்து பிறக்கும்படியான புண்ணியத்தைப் பெற்றிருக்கிறோம். நீ எல்லாம் நிறைந்தவன். உன்னிடம் ஏதேனும் ஒன்று இல்லை என்றிருந்தால்தான் எங்களைக் கேட்டுப் பெறவேண்டும். "நீ குறையொன்றும் இல்லாத கோவிந்தன்'. உனக்கும் எங்களுக்கும் உறவுமுறை உண்டு. அது நீ ஏற்படுத்திக் கொடுத்த உறவு. அந்த உறவை உன்னாலும் போக்கிக்கொள்ள முடியாது. எங்களாலும் போக்கிக்கொள்ள முடியாது. இவ்வளவு நாள்களாக உனக்கு, நாராயணன், பரமன் என்ற பெயர்கள்தான் மிக உயர்ந்தவை என்று எண்ணினோம். ஆனால், கோவிந்தன் என்ற பெயர்தான் உனக்குப் பெருமை தருகிறது. நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள். ஆதலால் உன்னை எப்படிக் கூறவேண்டும் என்று தெரியாமல், உன்னை அழைத்துவிட்டோம் ஆதலால், நீ பொறுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் மீது கோபித்துக் கொள்ளாதே. எல்லோருக்கும் மேலானவனே! நீ எங்களுக்கு விரும்பும் பறையைக் கொடுத்தருள வேண்டும் என்கிறார்கள். இந்தப் பாசுரம் விருந்தாவனம் (பிருந்தாரண்யம்) என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கிறது.